மும்பை: சாவர்க்கர் குறித்து கருத்து கூறிய ராகுல்காந்தி மீது மகாராஷ்டிரா போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் நடைபயணம் நடந்தது. அப்போது ராகுல் காந்தி பேசுகையில், ‘அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார்’ எனக்கூறி அதற்கான ஆதாரங்களையும் காட்டினார். சாவர்க்கர் குறித்து ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு ஆளும் சிவசேனா - பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர் வந்தனா சுஹாஸ் டோங்ரே சார்பில் சிவாஜி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், ‘சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்துகள் அவரை அவதூறு செய்தது போலவும், மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. அதனால் ராகுல்காந்தி மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ராகுல்காந்தி மீது ஐபிசி 500 மற்றும் 501 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, சாவர்க்கர் குறித்து ராகுல்காந்தி கூறிய கருத்துகளை தான் ஆதரிக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.